அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமர்ந்து அருள் புரியும் ஸ்ரீ சக்கர மகா மேரு உடைய ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனை வழிபட்டு அனைத்து நலன்களையும் பெற அன்புடன் அழைக்கிறோம்.
சீர்மிகு லட்சணம் பொருந்தி ஞானமே வடிவாகி மூவுலகம் மகிழ்ந்துருகி போற்றி வணங்கும் புவனேஸ்வரியே! போற்றி! போற்றி!
அமர்ந்த கோலத்தில் புன்னகை ததும்ப, பெற்ற தாய் போல் காட்சி அருளும் சர்வலோக ஈஸ்வரியே! போற்றி! போற்றி!
சகல தோஷங்களையும் போக்கி காத்தருளும் ஸ்ரீ சக்கர மகா மேரு உடைய ஆதி சக்தியே! போற்றி! போற்றி!
இச்சா, கிரியா, ஞானம் என முப்பெரும் சக்தியை ஒரே இடத்தில் இருந்து அருள் பாலிக்கும் எங்கள் ஸ்ரீ புவனேஸ்வரியே! போற்றி! போற்றி! போற்றி!
பூரணி யோக ஸ்ரீ புவனேஸ்வரி நீயே கதி அம்மா நாரணி ஜீவத் தாரணியே சிவ நாயகியே மோக்ஷதாயகியே அரணருளாகவே ஐந்தொழில் புரிந்திடும் ஆதிபராசக்தி நீயே அம்மா வரதாயகி சித்தகௌரி மனோன்மணி வாசாமா கோசரி நீயே அம்மா மஹேஸ்வரி தாயே ஜெய மங்களம், சுப மங்களம்! கால வெள்ளத்தில் புவனவெளிகளை பூத்து மலரச் செய்தவள் அன்னை புவனேஸ்வரி ஏகாட்சரமான ஹ்ரீம் பீஜமே, சாக்த ப்ரணவம் என போற்றப்படுகிறது. அந்த ஹ்ரீம் பீஜத்தில் விரும்பி உறைபவள் புவனேஸ்வரி.
நவரத்தினங்களால் ஆன பதினெட்டு பிராகாரங்களைக் கொண்டு மூவுலகிலும் நிகரற்ற அழகு வாய்ந்த நகரமாகத்திகழ்கிறது ..! அமுதமயமான கடலின் நடுவில் உள்ள மணித்வீபத்தில் அமுதமயமான கடலின் நடுவில் சங்கநிதி, பத்மநிதி இரண்டிற்கும் நடுவில் தேவி புவனேஸ்வரருடன் அமர்ந்து அருள்கிறாள். ஸ்ரீசக்ரதாடங்கங்களை அணிந்து தாமரை போன்ற முகத்துடன், சந்திரப் பிரபை, சூரியபிரபையைத் தலையில் சூடி அருட்காட்சியளிக்கிறாள். சந்தனக்குழம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ போன்ற வாசனைத் திரவியங்கள் பூசி, சங்கு போன்ற கழுத்து, மாதுளை முத்துகள் போன்ற பற்கள். ,
லஜ்ஜை, துஷ்டி, புஷ்டி, கீர்த்தி, காந்தி, க்ஷமை, தயை, புத்தி, மேதை, ஸ்ம்ருதி, லக்ஷ்மி போன்ற பணிப்பெண்கள் தேவிக்கு பணிவிடை செய்கிறார்கள். விஜயா, அஜிதா, அபராஜிதா, நித்யா, விலாஸினி, தோக்த்ரீ, அகோரா, மங்களா, நவா ஆகிய பீட சக்திகள் தேவியை சேவிக்கிறார்கள். ரக்தா, சாமுண்டா, பத்ரா, மஹாமாயா போன்றோர் புவனேஸ்வரியின் நாற்புறங்களிலும் இசைக் கருவிகளை இசைக்கிறார்கள். துர்க்கா, ராதா, லட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி ஆகிய பஞ்ச சக்திகளின் ஜனனீ. பாசம், அங்குசம், வரதம், அபயம் இவற்றால் ஜ்வலிக்கும் கர கமலங்கள் உடையவள்.
இந்த ஆலயத்தில் ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பால முருகன் அர்த்த மண்டபத்தில் அருள் பாலிக்கிறார்கள். மூலஸ்தானத்தில் கம்பீரமாக மிகவும் அழகாக சுமார் 4.5 அடியில் அமர்ந்த கோலத்தில் புன்னகை ததும்ப ஸ்ரீ சக்கர மகா மேரு உடன் அருள்புரிகின்றாள் தேவி ஸ்ரீ புவனேஸ்வரி. ஆலயத்தின் சிறப்பாக ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயமும், நவகிரகங்கள், காலபைரவர் சந்நிதி, விசேஷமாக யோகம் அருளும் சனீஸ்வரர் தனி சந்நிதி மற்றும் நாக தேவதைகள் உள்ளது. மூலஸ்தானத்தை சுற்றி பஞ்ச கோஷ்ட தெய்வங்களாக காயத்திரி தேவி, வைஷ்ணவி தேவி, பிராம்மகி, துர்க்கை, லட்சுமி தேவி, அங்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து நலன்களையும் அன்னையிடம் இருந்து பெற்றுத் தருகிறார்கள்.
அனைவரும் வருக! அம்மன் அருள் பெறுக!
-Sri Bhuvaneshwari Amman Temple